தடை இருந்தும் சிவகாசியில் திரண்ட மக்கள்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பகல் 1:00 மணி வரை அதிகளவில் மக்கள் நடமாடினர். அவர்களை போலீசார் அவ்வப்போது எச்சரித்து அனுப்பினர். நகருக்குள் நுழையும் இடங்களான டவுன் போலீஸ் ஸ்டேஷன், நாரணாபுரம் முக்கு, பாறைப்பட்டி செக்போஸ்ட், திருத்தங்கல் செக்போஸ்ட் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பொதுமக்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி நகர் பகுதிக்குள் சென்று வந்தனர். இதனால் போலீசார் திறக்கப்பட்டிருந்த கடைகளை மூட வலியுறுத்தினர். இதன் பின் மக்கள் நடமாட்டம் குறைந்தது. ரோட்டில் தேவையின்றி நடமாடியவர்களை போலீசார் விரட்டினர். பகல் 1:00 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து நகர் வெறிச்சோடியது. மெடிக்கல் ஷாப், மருத்துவ மனைகள் வழக்கம்போல் இயங்கின. பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், பிரின்டிங் ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. சிவகாசி அனைத்து கோயில்களும் பூட்டப்பட்டன. ஆட்டோ, வேன், டாக்ஸி உள்ளிட்டவைகள் இயங்கவில்லை.விழிப்புணர்வு இல்லா கிராமம் நகர் பகுதிகளில் போலீசார் முடிந்தளவு எச்சரிக்கை செய்து நடமாடியவர்களை எச்சரித்து அனுப்பினர். ஆனால் சிவகாசி பகுதி கிராம பகுதிகளில் டீ கடை, பெட்டி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இவர்களும் தாமாக முன்வந்து அடைத்தால்தான் முழுமையான மக்கள் நடமாட்டத்தை தடுக்க முடியும்.அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் ஒரு சில காய்கறி, மளிகை கடைகள் அரசு உத்தரவுபடி திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தெரியாமல் மக்கள் பஜார்களில் அதிகளவில் சுற்றி திரிந்தனர். அதிக நடமாட்டத்தை கண்ட போலீசார் அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி விரட்டினர். இதனால் திறந்திருந்த கடைகள் மூடப்பட்டன.