ஒத்துழைப்பு தாருங்களேன்: மாஸ்க் அணியாதவர்களால் தொற்று அபாயம்
பாதுகாப்பை முறையாக கடைபிடிப்பவர்கள் தொற்று பீதியில் உள்ளனர்.
கொரோனா தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. கொரோனாவை தவிர்க்க வீட்டில் இருப்பதே தீர்வு என்பதை அரசு வலியுறுத்தி வரும் நிலையில் மாவட்டத்தில் சிலர் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கின்றனர். இது கிராமங்களில் அதிகளவில் காணப்படுகிறது. நகர்களிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் பெயரில் பொழுதுபோக்காக வந்து செல்கின்றனர். இந்த அலட்சியம்தான் இத்தாலியில் மிகப்பெரிய அழிவை தந்தது என்பதை நாம் உணரவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
ஆனாலும் இதை பயன்படுத்தி கூட்டம் கூட்டமாக நடமாடுகின்றனர். போலீசார் தங்களது குடும்ப நலனையும் கருதாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யாரும் இதை பொருட்படுத்துவதில்லை.மிகவும் முக்கியான தவிர்க்கவே முடியாத சூழ்நிலை என்றால் மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும். ஆனால் ஏதோ பொழுபோக்கிற்காக சிலர் வெளியில் நடமாடுகின்றனர். போலீசார் அவர்களை தடுத்து விரட்டினாலும் ஏதாவது ஒரு காரணத்தை கூறுகின்றனர். கொரோனா பாதுகாப்பில் மிகவும் முக்கியமானது தனித்திருத்தலே. இதை யாரும் உணர்ந்தது போல் தெரியவில்லை. காய்கறி, பால், மளிகை , மருந்து போன்ற மிகவும் அத்தியாவசியான பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என அரசு தெளிவாக அறிவித்துள்ளது. ஆனாலும் சிலர் இந்த பொருட்களை மொத்தமாக வாங்க கூட்டமாக வருகின்றனர். பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசாருக்கும் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். இவ்வாறு வருபவர்களும் மாஸ்க் அணிந்து வருவதில்லை. நாம்தான் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கி கொரோனவை விரட்டியடிக்க முன் வர வேண்டும்.அலட்சியம் வேண்டாமேதற்போது நாடு மிக முக்கியமான கடினமான கால கட்டத்தில் உள்ளது. அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நிலைமை கடினம்தான். தேவையின்றி ரோட்டில் நடமாட கூடாது. மிகவும் அவசியம் என்றால் மட்டுமே வெளியில் வர வேண்டும்.
நாம் ஒருவர் நடமாடினால் என்ன ஆகி விட போகிறது என்ற அலட்சியத்தில் ஒவ்வொருவரும் நடமாடுகின்றனர். சமூக வலைதளங்களில் வருவதை போல் 'இப்போதைக்கு வீட்டிலிருந்தால் மே யில் சந்திக்கலாம். இல்லையென்றால் மேலேதான் சந்திக்க வேண்டும்' என்ற நிலையை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அரசுக்கும் போலீசாருக்கும் ஒத்துழைப்பு தந்து வீட்டிலே இருப்பதே சிறந்தது.--- ஜெயக்கொடி பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர், சிவகாசி.